Quantcast
Channel: மேய்ச்சல் மைதானம்
Viewing all articles
Browse latest Browse all 41

கரையெல்லாம் செண்பகப் பூ

$
0
0
சுஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள்ளலும், புதுமைகள் படைக்க வேண்டும் என்ற தீராத துடிப்பும் இருந்ததைக் காணலாம். இடைக்காலத்தில் எழுத்து நடையில் ‘கிம்மிக்ஸ்’களுக்கு விடைகொடுத்து விட்டு அழகாய் கதையை வர்ணித்து நகர்த்திச் செல்வார். பிற்காலத்தில் வந்த எழுத்துக்களில் அவருக்கே உரித்தான வார்த்தைச் சிக்கனம் மறைந்து நெடிய கதைகளாக எழுதினார். ஆன்மிகமும் அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டது அவரது எழுத்துக்களை. சுஜாதா என்கிற எழுத்தாளரின் பெயர் பிரபலமான இடைக்காலத்து எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடி்த்தமானது ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ நாவல்.

பாஸஞ்சர் திருநிலத்தில் போனால் போகிறது என்று நின்றது. ஒரு பெண் ஓடிஓடி வெள்ளரிப் பிஞ்சு விற்றாள். முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஒரே ஓர் இளைஞன் நீலநிற சூட்கேஸ், ஒரு கித்தாருடன் இறங்கினான். அவன் கழுத்தி்ல காமிரா மாலை. அந்தப் பிரதேசத்தில் மிக வினோதனாக, அன்னியனாக நின்றான். -இப்படி ஆரம்பிக்கிற பாராவிலேயே ஒரு காட்சியை உங்கள் மனக்கண்ணின் முன்னால் விரித்து, கட்டிப் போட்டு விடுவார் சுஜாதா. அதன்பின் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடி கதையைக் கொண்டு செல்வது சுஜாதாவின் எழுத்துத் திறனிற்கு மற்றுமொரு சாட்சி.

நாவலின் ஊடாக ஆங்காங்கே தெறிக்கும் சுஜாதா ஸ்பெஷல் வர்ணனைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ‘‘நீலச் சட்டைக்காரன் அன்னியனை ஒரு வஸ்துவைப் போல் பார்த்துக் கொண்டே நடந்தான்.’’ , ‘‘நகரத்தி்ல் கேட்டே அறியாத பட்சிகள் எல்லாம் ‘கல்யாணராமன்’ என்று அவனை எழுப்பின’’ ‘‘பெண் கிச் என்று நெருப்புக்குச்சி கிழித்தாற் போல் சிரித்தது எரிச்சலாக இருந்தது’’என்று படிக்கிற பக்கங்களில் எல்லாம் ரசனையான வர்ணனைகளில் சிக்ஸர் அடித்திருப்பார் சுஜாதா. பொதுவாகவே சுஜாதாவின் எழுத்தில் ‘மிகவும்’ என்ற வார்த்தையின் பிரயோகம் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறேன் நான். இதிலும் ‘கல்யாணராமன் மிகவும் விரும்பினான்’ என்கிற வாக்கியம் நாவலில் பலமுறை கையாண்டிருப்பார்.

கிராமத்துப் பாடல்களை வியக்கிற ஒரு இளைஞனாக கதாநாயகனை அமைத்து, அந்த கேரக்டர் மூலமாக அழகான நாட்டுப் புறப் பாடல்கள் சிலவற்றைச் சொல்லி ரசனையைத் தூண்டுவார் நாவலின் துவக்கத்தில். ஒருபுறம் கிராமத்து ஜோடிகளான வெள்ளியின் மேல் கல்யாணராமனுக்கு உள்ள ஒருவிதமான இச்சையையும், மருதமுத்துவுக்கு சினேகலதாவின் மேல் இருக்கும் அதேரக இச்சையையும் விவரித்து உணர்ச்சிப் போராட்டங்கள் நடத்துவார். மற்றொரு புறம் கிராமத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் சனங்களில் இயல்புகளையும் போகிற போக்கில் விவரித்து தனியாக ரசனைக்குத் தீனி போடுவார். இன்னொரு புறம் ஜமீன் பங்களாவில் இரவில் கேட்கும் மர்ம சப்தங்கள், சினேகலதாவின் கொலை, அதைத் தொடரும் விசாரணைகள், இறுதியில் வெளியாகும் திடுக்கிடும் உண்மை என்று விறுவிறுப்புக்கு உத்தரவாதம் தந்திருப்பார். ஆக இந்தக் கதையை மூன்று பரிமாணங்களில் நாம் ரசிக்க முடியும்.

பின்னாளில் இந்த நாவல் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ என்ற பெயரிலேயே திரைப்படமாக வெளியானது. பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா, மனோரமா, தங்கவேலு போன்றவர்கள் நடித்திருந்தார்கள். திரைப்படமான சுஜாதாவின் கதைகளைப் பொறுத்தவரையில் மூலத்தில் அவர் எழுதியது நிறைய
மாற்றப்பட்டு கொத்துக்கறி போடப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் கதையைப் பொறுத்தவரை கூடியவரை சுஜாதாவின் கதையை மாற்றாமலேயே படமாக்கியிருந்தார்கள். என்றாலும், (ஒருவேளை அதனால்தானோ) படம் பரபரப்பாக ஓடவில்லை. சுமாராகத்தான் ஓடியது. ‘காடெல்லாம் பிச்சிப்
பூ, கரையெல்லாம் செண்பகப் பூ, நாடெல்லாம் மணக்குதுல்ல அந்த நல்லமகன் போற பாதை’ என்று சுஜாதா எழுதிய நாட்டுப்பாடலைக் கூட இளையராஜா ட்யூனில் படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள். இப்பக் கேட்டாலும் நன்றாகவே இருக்கும்.

ஆனந்த விகடன் வார இதழில் இந்தத் தொடர்கதை வெளியான சமயத்தில் வாசக உலகில் பெரும் வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அப்போதைய ஆ.வி. ஆசிரியர் இந்தத் தொடர்கதை வெளியான சமயம் அடிக்கடி தொடர்பு கொணடு உற்சாகப்படுத்தியதையும், தொடர் முடிந்ததும் உடனடியாக இன்னொரு தொடர் எழுதுங்க என்று ‌சொன்னதையும் தன் ‘கற்றது்ம பெற்றதும்’ பகுதியில் பகிர்ந்து கொண்டிருந்தார் சுஜாதா. அத்தகைய வெகுமதிக்கும், பாராட்டுக்கும் முழுத் தகுதி பெற்ற இந்த நாவலை நீங்கள் இதுவரை படித்ததில்லை என்றால் உடன் படித்து ரசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

இந்தக் கதையின் சுருக்க வடிவினைப் படிக்க இங்கே க்ளிக் :கேப்ஸ்யூல் நாவல்-8

Viewing all articles
Browse latest Browse all 41

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!